அடிச்ச அதிகாரிக்கு பதவி உயர்வா... வெகுண்ட சாமளாபுர மக்கள் மறியல் போராட்டம்
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை ஓங்கி அறைந்த அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதைக் கண்டித்து சாமளாபுர மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் போராட்டத்தை நடத்தக் கூடாது என்றும் கலைந்து செல்லுங்கள் என்றும் கூறினார்கள். இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத பெண்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்தியது. அதுமட்டுமல்லாமல், அய்யம் பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். அதில் அந்த பெண்ணுக்கு காது கேட்கும் திறன் பறிபோனது. இந்த சம்பவம் சமூக வலை தளங்களிலும் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்த நிலையில் தமிழக அரசு அவருக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்துள்ளது. ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், ஈரோடு மாவட்ட அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார்.
தமிழக அரசின் இந்த பதவி உயர்வு அறிவிப்பு சாமளாபுர மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில், சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, தடியடி சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மேலும் ஈஸ்வரி கன்னத்தில் அறைந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டிய ராஜனின் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தினர்.












Click it and Unblock the Notifications