ஒரு பாட்டி.. 2 பார்ட்டி.. திமுக, அதிமுக விளம்பரங்களைக் கலக்கும் கஸ்தூரிப் பாட்டி!
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையான விளம்பர கோதாவில் குதித்துள்ளன.
இரு கட்சிகளுமே தங்களது ஆதரவு தொலைக்காட்சி சேனல்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பொதுவான சேனல்களிலும் போட்டி போட்டு விளம்பரங்களை அள்ளி வீசி வருகின்றன.
திமுக விளம்பரங்களில் கடந்த ஐந்தாண்டு கால அதிமுக அரசு குறித்த விமர்சனங்கள் முழுக்க முழுக்க இருக்கின்றன.

தாக்குதல்
பெரும்பாலும், திமுக என்ன செய்ய உள்ளது என்பது குறித்து ஸ்டாலின் விளக்கும் விளம்பரங்களைவிட, அதிமுக அரசை தாக்கி பேசும் விளம்பரங்களே அதிக அளவில் காண்பிக்கப்படுகின்றன.

சாமானிய பெண்கள்
ஏசியில் அமர்ந்திருப்பவருக்கு மக்கள் கஷ்டம் எப்படி தெரியும், அப்படி என்னங்க அலட்சியம்.. நடு ராத்திரியில் தண்ணிய திறந்து விடுறீங்க.. என்பது போன்ற வசனங்களுடன், சாமானிய பெண்கள் போல தோற்றம் கொண்டோரை வைத்து அரசுக்கு எதிராக சென்டிமென்ட் விளம்பரங்களை போட்டு தாக்குகிறது திமுக.

சென்டிமென்ட் அதிமுக
அதேநேரம், அதிமுக விளம்பரங்களில், எதிர்தரப்பு தாக்குதல் இல்லை. தங்களது சாதனைகளை கூறி விளம்பரங்கள் வருகின்றன. அதிலும் ஏழை பெண்கள் போன்ற தோற்றம் கொண்டவர்கள், சென்டிமென்ட்டாக பேசி 'அம்மாவை' புகழ்கிறார்கள்.

போதும்மா..
"வானத்தில பறக்குறவங்களுக்கு, நம்மளுடைய பிரச்சினை எப்படிங்க தெரியும்? மக்கள பத்தியே கவலப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா..." இந்த டயலாக்கை உணர்ச்சி பொங்க கையை ஆட்டியபடியே, ஒரு வயதான மூதாட்டி சொல்வது போன்ற திமுக விளம்பரங்களை அடிக்கடி நீங்கள் டிவியில் பார்த்திருக்க கூடும்.

புகழ்ந்ததும் இவரே
இந்த விளம்பரம் பெருமளவில் மக்களிடம் ரீச் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதே பெண்மணிதான், அதிமுக விளம்பரத்தில் ஆட்சியை புகழ்ந்து நடித்துள்ளார் என்பதுதான் இதில் சிறப்பு.

அன்னதான திட்டம்
ஆம்.. கோயில்களில் செயல்படுத்தப்படும் அன்னதானம் திட்டத்தால் பலன் அடைந்த பெண்மணி போல நடித்து அதிமுக அரசை வாழ்த்தும் விளம்பரம் ஒன்றிலும் இதே பெண்மணிதான் நடித்துள்ளார்.

சோறுபோட்ட தெய்வம்
ஏழை மூதாட்டி போன்ற தோற்றத்தில் கோயிலுக்கு செல்லும், இப்பெண், அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிடுவதை போலவும், அப்போது, "பெத்த புள்ள சோறுபோடல.. எனக்கு சோறுபோட்ட தெய்வம் புரட்சி தலைவி அம்மாதான்.." என்று மிகவும் உணர்ச்சிமிகுதியில் பேசுவதை போலவும் அந்த விளம்பரம் அமைந்துள்ளது. இதை தொடர்ந்து, நலத்திட்டங்களே அம்மாவின் ஆட்சி, மக்களே அதற்கு சாட்சி.. என்ற அதிமுக வாசகங்கள் இடம் பெறுகின்றன.

நடிப்பு திறமை
இவ்விரு விளம்பரங்களிலுமே நடித்துள்ளது கஸ்தூரி என்ற முதாட்டி. சினிமா நடிகையான, இவரது நடிப்பு திறமைக்காக இரு தரப்பு விளம்பர ஏஜென்டுகளுமே அமுதவள்ளியை நடிக்க வைத்திருக்க கூடும்.
உணர்ச்சிகரத்தில் தேவையா
ஆனால், இப்படி மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில், இரு தரப்புக்கும், ஒரே பெண்மணியை நடிக்க வைத்து ஏஜென்டுகள் தவறிழைத்து விட்டதாக பொது நோக்கர்கள் கருதுகிறார்கள். இதன் மூலம், இரு தரப்பு விளம்பரங்களின் நம்பகதன்மையை கேள்விக்குறியாகிவிடும் என்பது அவர்கள் எச்சரிக்கை. நடிப்பை நடிப்பாக மட்டுமே பார்த்தால் இந்த பிரச்சினை வராது.












Click it and Unblock the Notifications