உடுமலை சங்கர் கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து 6 பேர் அப்பீல்
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து 6 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சென்னை: ஜாதி ஆணவத்தால் உடுமலைப்பேட்டை சங்கரை படுகொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 2015-ம் ஆண்டு தம்முடன் படித்த சங்கரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை கவுசல்யாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர்.
இதையடுத்து 2016-ம் ஆண்டு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் கவுசல்யா உயிர் பிழைத்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 6 பேருக்கு அண்மையில் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சின்னச்சாமி உட்பட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கில் தீர்ப்பளித்திருந்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.