சங்கரன்கோவில்: ரோட்டில் காயப் போட்ட உளுந்து செடி வழுக்கி விபத்து... 2 இளைஞர்கள் பலி
திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே ரோட்டில் காயப் போட்டிருந்த உளுந்தச் செடியில் சிக்கி மோட்டார் சைக்கிள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமரம் பகுதியில் உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் சவுந்தரராஜன் (25). இவரும், அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் சுரேஷ் (24) என்பவரும் நண்பர்கள்.
விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்கள் இருவரும், நேற்று இரவு எட்டு மணியளவில் நடுவக்குறிச்சியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் காயப்போடப் பட்டிருந்த உளுந்து செடிகளை, இரவு நேரமாகியும் அகற்றாமல் இருந்துள்ளனர்.
இருட்டில் சென்றதால், உளுந்து செடியில் சிக்கி மோட்டார் சைக்கிள் டயர் நழுவி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்து செடி வழுக்கி இளைஞர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.