ஒருதலைக்காதல்... பிளஸ் 1 மாணவியை பஸ்ஸில் வெட்டிய பாலிடெக்னிக் மாணவர்... தூக்கிட்டுத் தற்கொலை
சங்கரன்கோவில்: காதலிக்க மறுத்த பிளஸ் ஒன் மாணவியை அரிவாளால் வெட்டிய பாலிடெக்னிக் மாணவர், சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி அருகே சங்கரன்கோவிலை அடுத்துள்ள, புளியம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் என்பவரின் மகன் சின்னசொக்கலிங்கம் (18). இவர் ராஜபாளையம் தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

சொக்கலிங்கம் தன் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்தக் காதலுக்கு அம்மாணவி விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதனால், அம்மாணவி மீது சொக்கலிங்கம் ஆத்திரத்தில் இருந்துள்ளார். கடந்த மாதம் காதலர் தினத்தன்று அதிரடியாக அம்மாணவியின் வீட்டிற்குள் நுழைந்த சொக்கலிங்கம், தன் காதலை ஏற்குமாறு அப்பெண்ணிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது துப்பட்டாவால் அம்மாணவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யவும் முயற்சித்துள்ளார்.
இதனைத் தடுக்க முயற்சித்த அம்மாணவியின் தாயாரைக் கிரைண்டர் கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் சொக்கலிங்கம். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சங்கரன்கோவில் போலீசார், சொக்கலிங்கத்தைக் கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.
ஒரு மாத சிறை வாசத்திற்குப் பின்னர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் சொக்கலிங்கம். தொடர்ந்து அம்மாணவி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் தனியார் பேருந்தில் பள்ளித் தேர்வுக்கு சென்று கொண்டிருந்த மாணவியை அரிவாளால் தாக்கியுள்ளார். பெட்ரோல் போடுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, பேருந்தில் ஏறிய சொக்கலிங்கம் அங்கிருந்தவர்களை மிரட்டி விட்டு, அப்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியுள்ளார்.
இதில், கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சொக்கலிங்கத்தைப் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சொக்கலிங்கம், நேற்று முன்தினம் இரவில் சங்கரன்கோவில் ரயில் நிலைய பிளாட்பார ஓரத்தில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காதலிக்க மறுத்த மாணவியை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்ததால், போலீசார் மீண்டும் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து சின்ன சொக்கலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இது குறித்து, ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications