மீடியாவில் பெயர் வருவதற்காக தரம் தாழ்ந்து பேசுகிறார் இளங்கோவன்: சரத்குமார் தாக்கு
சென்னை: செய்திகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காக நாகரீகம் இன்றி பேசுவதை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வாடிக்கையாக்கிவிட்டார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர்.சரத்குமார் சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், மோடி-ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சரத்குமார், ‘'இளங்கோவன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் வரை போராட்டங்கள் தொடர வாய்ப்புள்ளது. இளங்கோவனின் விமர்சனம் நாகரிகமற்றது. காங்கிரஸ் மேலிடம் இளங்கோவனை பதவி நீக்கம் செய்யவேண்டும்.
இளங்கோவனுக்கு இது வாடிக்கையாகிவிட்டது. எப்போது பார்த்தாலும் இப்படி பேசி பழகிவிட்டார். தன்னைப் பற்றி மீடியாக்களில் ஏதாவது செய்திகள் வர வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசி பழகிவிட்டார்.
இது அரசியல் நாகரீகமற்ற செயல். காங்கிஸ் கட்சிக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அதைவிட இளங்கோவன் குடும்பத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் இவ்வாறான கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட வேண்டாம்.
எதிர்க்கட்சியில் இருப்பவர்களை தாக்கிபேச வேண்டுமாயின் அதற்காக நாகரீகமான வார்த்தைகள் உள்ளன. அதைவிடுத்து இவ்வாறு அநாகரீகமான வார்த்தைகளை கொண்டு தாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.
இளங்கோவன் பேசியதற்கு திமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தருகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், "நாட்டின் பிரதமரும், தமிழக முதல்வரும் சந்தித்ததை கொச்சைப்படுத்தி பேசியதை எந்தக் கட்சியாலும் ஆதரிக்க முடியாது. அப்படி ஆதரித்து பேசினால் அது ஜனநாயக சீர்கேடு" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications