மத்திய நிபுணர் குழுவும் தமிழகத்தை ஒரு தலைபட்சமாக பார்த்தால் எப்படி?..சரத்குமார் வேதனை
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழகத்திடம் பாரபட்சமாக நடந்து வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட மத்திய நிபுணர் குழுவும் தமிழகத்தை பாரபட்சமாக பார்ப்பது வேதனை தருவதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி மத்திய வல்லுநர் குழுவும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.
கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் ஆய்வை மேற்கொண்ட இக்குழு, பருவ மழை காரணமாக இரு மாநிலங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், தமிழகத்தை விட கர்நாடகத்தில் பாதிப்பு அதிகம் என்றும் தெரிவித்திருக்கிறது.
ஆனால் கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி அங்குள்ள விவசாயிகள் சாகுபடியை ஏற்கனவே முடித்துவிட்டு, 2ம் சாகுபடியும் ஒரு சில இடங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகம் இன்னும் வறட்சியில் உள்ளது. தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. சம்பாவும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் காவிரி மத்திய வல்லுநர் குழுவும் தமிழகத்தை தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக பார்ப்பது வேதனை அளிக்கிறது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications