உங்களிடம் யார் ஆதரவு கேட்டார்கள்...? சொல்லுங்க... ரஜினியை சீண்டும் சரத்குமார்
சென்னை: தன்னிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் சரத்குமார் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமார் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில நகராட்சிகளை கேட்டும் அதனை அதிமுக தலைமை கொடுக்க மறுப்பது குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்ஸ்
உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்றும், தன்னுடைய படத்தையோ, மன்றக் கொடியையோ யாரும் பயன்படுத்தக் கூடாதென்றும் ரஜினி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து அவரிடம் யார் ஆதரவு கேட்டது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியதுடன் விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.

தலைவர்கள் அமைதி
ரஜினியின் இந்த அறிவிப்பு பற்றி எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவிக்காத நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மட்டும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். தன்னிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்பதை ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணி
சரத் குமார் கருத்துபற்றி அவரது கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, அண்ணாச்சி அதிமுக, பாஜக கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்தும் அவருக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் தரப்படவில்லை. அரசியலுக்கே வராத ரஜினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பாஜக, கடந்த தேர்தல்களில் பாஜக வெற்றிக்காக பிரச்சாரம் செய்த எங்க அண்ணாச்சியை கண்டுகொள்ள மறுக்கிறது என புகார் கூறினர்.

அதிமுக மறுப்பு
இதனிடையே தென்மாவட்டங்களில் 2 நகராட்சிகளை அதிமுகவிடம் ச.ம.க.வுக்கு கேட்டுள்ளார் சரத்குமார். ஆனால் பதிலோ நெகட்டிவாக வந்ததால் ஏகத்துக்கும் அப்செட்டில் உள்ளாராம் அவர்.












Click it and Unblock the Notifications