கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு.. சரத்குமாருக்கு திருச்செந்தூர் தொகுதி மீனவர்கள் எதிர்ப்பு
திருச்செந்தூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவு அளித்தவர் என்பதால் திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமாருக்கு, அங்கு பரவலாக வாழும் மீனவர் சமூகத்தினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அச்சம் உள்ளது. அதிலும் நெல்லை மாவட்ட மீனவர்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகிவருகிறார்கள்.

ஆனால், தென்காசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதாபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக பேசினார். இதனால் மீனவர்கள் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மீனவர் கிராமங்கள் பல அடங்கிய திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். இங்கு நாடார்களுக்கு அடுத்தபடியாக, பரதவர் வாக்குகள் அதிகமாக உள்ளது. இவர்கள் மத்தியில் சரத்குமார் மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுகவும், கூடங்குளம் அணு உலையை மூடுவதாக வாக்குறுதி தரவில்லை என்றபோதிலும், திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனைவிட சரத்குமார் மீதுதான் மக்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications