'சூரிய சக்தி' மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
கோயம்புத்தூர்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கோவை நீதிமன்றத்தில் கேரளாவின் சரிதா நாயர் ஆஜரானார்.
கோவையில் சூரிய மின் சக்தி உபகரணங்கள் தயாரித்து தருவதாக 31 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கேரளாவில், சரிதா நாயர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதால் அம் மாநிலத்தை விட்டு வெளியேற, கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதனால் கோவை நீதிமன்றத்தில் சரிதா ஆஜராகவில்லை.

அப்படி மாநிலத்தை விட்டு செல்வதாக இருந்தால் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது சரிதா நாயர் கண்டிப்பாக ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று நடந்த விசாரணையில், சரிதா நாயர், ரவி ஆகியோர் எர்ணாகுளம் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கோவையில் ஆஜர் ஆகினர்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வி. கார்த்திகேயன், செப்டம்பர் 18ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications