விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் இன்ஜின் ஆயிலை ஊற்றியிருப்பார்கள்.. சசி தரூர் பரபர கருத்து
விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: சுவாமி விவேகானந்தர் இன்று இந்தியாவில் இருந்திருந்தால் அவரும் சுவாமி அக்னிவேஷ் போல குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடந்த மாதம் ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது குறித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் சசி தரூர் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் இன்று இந்தியாவில் இருந்திருந்தால், சுவாமி அக்னிவேஷ் போல அவரும் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார்.
அவர் முகத்திலும் எஞ்ஜின் ஆயில் ஊற்றி தெருவில் கீழே தள்ளி அடித்திருப்பார்கள். ஏனென்றால், சுவாமி விவேகானந்தர் மக்களை மதிக்க வேண்டும் என்றும் மனிதநேயம் தான் முக்கியம் என்று கூறியவர். அதனால், சுவாமி அகினிவேஷ் தாக்கப்பட்டது போல, சுவாமி விவேகானந்தரும் தாக்கப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சசி தரூர், "மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 4 ஆண்டுகளில் 2,920 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. நாடு முழுவதும் பசுவதை தாக்குதல் தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாஜக ஆட்சியில் மட்டும் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய சசி தரூர் பாஜக ஆட்சிக் காலத்தில் மத வன்முறைகளும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான, சசி தரூர், பாஜகவையும், இந்துத்துவா அமைப்புகளையும் அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் அண்மையில், வருகிற 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா இந்து பாகிஸ்தானாகிவிடும் என்று விமர்சனம் செய்தார். மேலும், இவர்கள் வருகிற வெற்றி பெற்றால் இந்திய அரசியல் அமைப்பை அழித்துவிட்டு புதிய ஒன்றை எழுதுவார்கள் என்று சசி தரூர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
அதே போல, கடந்த மாதம் ஜார்கண்டில் சுவாமி அக்னிவேஷ் இந்துத்துவா அமைப்புகளால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வந்து அவரைக் காப்பாற்றவில்லை. பின்னர், அவரை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து பொதுமக்களே காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.