ஆர்கே நகர் தேர்தல் ரத்தால் அதிர்ச்சி.. தினகரனுக்கு சிறையில் இருந்து டோஸ் விட்ட சசிகலா
ஆர்கே நகர் தேர்தல் ரத்தால் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். தமது பேச்சை மீறி தினகரன் போட்டியிட்டதால்தான் தேர்தல் ரத்தானது என அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா.
சென்னை: ஆர்கே நகரில் டிடிவி தினகரன் போட்டியிட்டதை சகிக்காமல் இருந்த சசிகலாவுக்கு தேர்தலே ரத்து செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். இதனால் சிறையில் இருந்தபடியே இளவரசி மகன் விவேக் செல்போனில் தினகரனை தொடர்பு கொண்டு கடுமையாக டோஸ் விட்டாராம் சசிகலா.
சசிகலா சிறைக்குப் போகும்போது ஆர்கே நகர் தொகுதியில் குடும்ப உறவினர்கள் யாரும் போட்டியிட வேண்டும்; எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் போட்டியிடட்டும் என கூறியிருந்தார்.
சுதா விஜயகுமார் மட்டுமே அதிமுகவில் ஆர்கே நகரில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்திருந்தார். அவரைத்தான் தேர்வு செய்யப்போகிறோம் என அதிமுக ஆட்சி மன்ற குழுவினரும் எதிபார்த்திருந்தனர்.
திடீர் வேட்பாளர் தினகரன்
ஆனால் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் முடிவடையும்போது தம்மை வேட்பாளராக அறிவிக்க தினகரன் உத்தரவிட்டார். இதனால் வேறுவழியே இல்லாமல் தினகரனை அதிமுக ஆட்சி மன்ற குழு வேட்பாளராக அறிவித்தது. இதை கேள்விப்பட்ட சசிகலா கொந்தளித்துப் போனார்.
சசிகலா இருட்டடிப்பு
இதன்பின்னர் சசிகலாவின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தாமலேயே அவரை இருட்டடிப்பு செய்து தேர்தல் பிரசாரத்தில் மும்முரமானார் தினகரன். இதனால் என்னதான் செய்வது என தெரியாமல் தவித்து வந்தார் சசிகலா.
பேச்சை கேட்கலையே...
இதனிடையே ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்தாகலாம் என செய்திகள் வர ரொம்பவே அதிர்ந்து போனாரம் சசிகலா. மத்திய அரசு நம்மை விரும்பவில்லை.. இப்படியெல்லாம் செய்யக் கூடும் என்பதால்தானே உறவினர்களே போட்டியிட வேண்டாம் என சொன்னேன்.. என் பேச்சை கேட்காததால் இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது என குமுறியுள்ளார்.
போனில் டோஸ்
அப்போது சசிகலாவை சந்திக்க இளவரசி மகன் விவேக் சிறைக்கு சென்றிருக்கிறார். அவரது செல்போன் மூலம் டிடிவி தினகரனை தொடர்பு கொண்டு கடுமையாக சாடிவிட்டாராம் சசிகலா. இதனால் தினகரன் தரப்பு வெளிக்காட்டாமல் படு அப்செட்டில் இருந்து வருகிறதாம்.