சசிகலாவா.. தீபாவா.. தொடரும் பேனர் கிழிப்புகள்.. அடித்துக் கொள்ளும் அதிமுகவினர்
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளாத அக்கட்சித் தொண்டர்கள் சசிகலா பேனர்களை கிழித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேனர்களை வைத்தனர். இதனால் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் அதிகரித்து வருகிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவின் தலைமைக்கு யார் வருவார் என்பது குறித்து பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் எழவில்லை. மேலும், அக்கட்சியின் பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக் குழுவிலே தீர்மானம் நிறைவேற்றி சசிகலா டிசம்பர் 31ம் தேதி பொதுச் செயலாளராக பணியையும் தொடங்கிவிட்டார்.
தலைமை அளவில் பிரச்சனைகள் எதுவும் எழாத நிலையில், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் சசிகலாவிற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. மேலும், பொதுச் செயலாளராக பதவியை ஏற்ற சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்து சசிகலா ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்து வரும் நிலையில், அதனை கிழித்து விட்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேனர்களை, அவரது ஆதரவாளர்கள் வைக்கின்றனர்.

சசிகலா பேனர்கள் கிழிப்பு
சசிகலா பொதுச் செயலாளர் பதவியை ஏற்று பணியை தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து, கோவையில் உள்ள சூலூர், கண்ணம்பாடி பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்திருந்தனர். இந்தப் பேனர்களை தீபா ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.

போட்டி தீபா பேனர்
சசிகலாவின் பேனர்களை கிழித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்கள், போட்டிக்கு தீபாவை வாழ்த்தி பேனர்களை வைத்தனர். இதனால் சசிகலா ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும், அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஜெ.தீபா பேரவை
ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்ட நிலையில், கோவையில் உள்ள காடுவெட்டிபாளையம், பாப்பம்பட்டி, கள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இதே போன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தீபா பேரவையில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாழ்த்தும் எதிர்ப்பும்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சசிகலா பொறுப்பேற்றதை வாழ்த்தி அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். பல்வேறு இடங்களில் பேனர்களை அதிமுகவினர் வைத்திருந்தனர். அந்த பேனர்களை தீபா ஆதரவாளர்கள் கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவு பேனர்களை அதிமுக தொண்டர்கள் கழட்டிச் சென்றனர்.

போலீசில் புகார்
சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும் பேனர்களை கிழிக்கும் தீபா ஆதரவாளர்கள் யார் என்பது தெரியவில்லை. எனவே, இவர்களை கண்டுபிடித்து விசாரிக்க வேண்டும் என்று சசிகலா ஆதரவு அதிமுகவினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications