டிடிவி தினகரனுக்கு எதிராக களமிறங்கும் திவாகரன் - சசிகலா குடும்பத்தில் சர்ச்சை
அக்காள் மகன் டிடிவி தினகரனுக்கு எதிராக அவரது தாய்மாமன் திவாகரன் களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பந்தியை இடமாற்றம் செய்ததால் சர்ச்சை வெடித்துள்ளதாம்.
சென்னை: திவாகரனின் சம்பந்தியான கூடுதல் எஸ்.பி ஜெயச்சந்திரன் கன்னியாகுமரியில் இருந்து கரூர் தலைமையிட கூடுதல் எஸ்பியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த இடமாற்றத்திற்குக் காரணம் டிடிவி தினகரன்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அவரது எதிராக மோதலை தொடங்கியுள்ளார் சசிகலாவின் தம்பியான திவாகரன்.
சசிகலாவின் அண்ணன் தம்பிகள், அக்காள் மகன்களுக்கு இடையே ஒருவித புகைச்சல் கிளம்பியுள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பிகள், தம்பி மகன்களும் டிடிவி தினகரனுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
குவிந்த குடும்ப உறுப்பினர்கள்
ஜெயலலிதாவால் துரோகிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு துரத்தப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன், அக்கா மகன் டிடிவி தினகரன், தம்பி திவாகரன், அண்ணன் மகன் வெங்கடேஷ், மற்றொரு அக்கா மகன் மகாதேவன் உட்பட 20க்கும் மேற்பட்ட உறவினர்கள் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு போயஸ்தோட்டத்திற்கு வந்தனர்.
டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் சசி
அண்ணன், தம்பிகள், உறவினர்கள் இருந்தாலும், டிடிவி தினகரனும், வெங்கடேசும்தான் கட்சியையும், சசிகலாவையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனராம். இதனாலேயே திவாகரன், டிடிவி தினகரன் இடையே மோதல் வெடித்தது.
கட்சியில் பதவி
சசிகலா சிறை செல்லும் முன்பாக டிடிவி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் சேர்த்து அவருக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்தார். இதனால் டிடிவி தினகரன்தான், கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்கானவராக மாறியுள்ளார்.
பாஸ் திவாகரனுக்கு நோ
கட்சியில் முன்பு செல்வாக்காக இருந்தவர் திவாகரன்தான். பாஸ் என்று அழைக்கப்பட்ட இவர் டிடிவி தினகரனின் தாய்மாமன். அவரையே இப்போது ஓரங்கட்டிவிட்டு தனது மச்சினர் டாக்டர் வெங்கடேஷ் உடன் மட்டுமே கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்கிறாராம் டிடிவி தினகரன்.
உளவுத்துறையில் சம்பந்தி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உளவுத்துறையில் தங்கள் குடும்பத்து ஆட்கள் இருக்க வேண்டும் என்று திவாகரன் தனது மகளின் மாமனாரான கூடுதல் எஸ்பி ஜெயச்சந்திரனை நியமித்தார். ஆனால் ஓபிஎஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயச்சந்திரனை கன்னியாகுமரிக்கு மாற்றினார்.
கன்னியாகுமரி டூ கரூர்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றதும், ஜெயச்சந்திரன் மீண்டும் உளவுத்துறையில் கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் தயார் நிலையில் இருந்தார். ஆனால் கன்னியாகுமரியில் இருந்து கரூர் தலைமையிட கூடுதல் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார் ஜெயச்சந்திரன்.