சசிகலா குடும்பத்தை மீண்டும் கட்டம் கட்டிய ராத்திரி ரெய்டு!
சசிகலாவின் குடும்பத்திற்கு அதிர்ச்சி தரும் நள்ளிரவு சம்பவங்கள் மீண்டும் அரங்கேற தொடங்கியிருப்பது குடும்பத்தினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சசிகலாவின் குடும்பத்திற்கு அதிர்ச்சி தரும் நள்ளிரவு சம்பவங்கள் மீண்டும் அரங்கேற தொடங்கியிருப்பது குடும்பத்தினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.ஓபிஎஸ் தியானம் முதல் தற்போது போயஸ் கார்டன் ரெய்டு வரை நள்ளிரவிலேயே நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு தான் உடல் நலக்குறைவு எனக்கூறி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா குடும்பத்திற்கு ஒரே சறுக்கல்தான்.

நள்ளிரவு சம்பவங்கள்
சசிகலாவின் நெருங்கிய உறவினர்களின் இறப்பு, சிறை தண்டனை என அடுத்தடுத்து சோதனைகள் ஏற்பட்டு வருகிறது. சசிகலா குடும்பத்துக்கு அதிர்ச்சிக் கொடுக்கும் பெரும்பாலான சம்வங்கள் அனைத்தும் நள்ளிரவிலேயே அரங்கேறி வருகிறது.

ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை நியமித்துக்கொண்ட சசிகலா முதல்வராக முயன்றார். இதற்கு போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி இரவு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீர் தியானம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
விடிய விடிய நீடித்த இந்த சம்பவத்தால் தமிழக அரசியல் களத்தில் வரலாறு காணாத பரபரப்பை ஏற்பட்டது. அதுவரை ஆதரவாக இருந்த ஓபிஎஸ் திடீரென எதிராக திரும்பியது சசிகலா குடும்பத்திற்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

தேர்தல் ஆணையம் தந்த அதிர்ச்சி
இதைத்தொடர்ந்து இரட்டை இலைச்சின்னம் தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 23 தேதி நள்ளிரவில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது சசிகலா கொடுக்கப்பட்ட அடுத்த நள்ளிரவு அதிர்ச்சி.

ஆர்கே நகர் இடைத்தேர்தல்
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நள்ளிரவில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் இந்த அதிரடி முடிவை எடுத்தது தேர்தல் ஆணையம். இது சசிகலா தரப்பின் தலைகளில் இடியை இறக்கிய மூன்றாவது சம்பவம்.

எடப்பாடி அளித்த அதிர்ச்சி
இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சசிகலா குடும்பத்தினரை நீக்குவதாக எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் அறிவித்தனர். டிடிவி தினகரனால் கட்சிக்கு ஆபத்து என்பதால் அவர்களின் குடும்பம் அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூத்தும் இரவு நேரத்திலேயே அரங்கேறியது.

நள்ளிரவில் கைதான டிடிவி
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி டிடிவி.தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டார். இது சசிகலா தரப்பை ஆட்டம் காண வைத்தது.

மீண்டும் கட்டம் கட்டும் இரவு சம்பவங்கள்
இதைத்தொடர்ந்து சற்று ஓய்வெடுத்த நள்ளிர திகில் சம்பவங்கள் தற்போது மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. போயஸ் கார்டனில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நள்ளிரவை தாண்டி நீடிக்கிறது. இதில் பல முக்கிய தகவல்கள் அடங்கிய பென் ட்ரைவ்கள் மற்றும் லேப்டாப்கள் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் நள்ளிரவு சம்பவங்கள் கட்டம் கட்ட தொடங்கியிருப்பது சசிகலா குடும்பத்தை பீதியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications