ஜெ.மரணம்.. சசிகலா குடும்பத்தினரிடம் உண்மையறியும் கருவி மூலம் விசாரிக்க வேண்டும்: மாதவன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் உண்மையறியும் கருவி மூலம் விசாரிக்க வேண்டும் என தீபாவின் கணவர் மாதவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் உண்மையறியும் கருவி மூலம் விசாரிக்க வேண்டும் என தீபாவின் கணவர் மாதவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அண்மையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
தீபாவிடம் விசாரணை
இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் நேரில் விளக்கம் பெற்று வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் தற்போது ஜெயலலிதா குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்து வருகிறது.
3 மணிநேரம் விசாரணை
அதன்படி நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆறுமுகசாமி கமிஷனில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று விசாரணை
நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். 4 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மாதவனிடம் விசாரணை
இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை கமிஷனின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜெ. மரணம் - விசாரணை
அப்போது ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா, நடராஜன், திவாகரன், டிடிவி தினகரன், ராஜம்மாள், பூங்குன்றன் உள்ளிட்டடோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உண்மை கண்டறியும் கருவி
மேலும் இதுதொடர்பாக விசாரணை கமிஷனில் புதிய மனு ஒன்றை கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் சசிகலா குடும்பத்தினரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மை கண்டறியும் கருவி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தீபாவின் கணவர் மாதவன் வலியுறுத்தினார்.