சசிகலாவுக்கு பரோல் கிடைத்ததற்கு காரணமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான்- தீபா தடாலடி
மக்களும், தொண்டர்களும் விரும்பினால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்று தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவுக்கு பரோல் கிடைத்ததற்கு காரணமாக இருந்தவரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று தீபா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்த்துக் கொள்வதற்காக சசிகலா பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி சசிகலா பரோல் கோரி கடந்த 28-ஆம் தேதி சிறைத் துறையில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை பரோலில் வெளியே வந்தார்.
தமிழக அரசுதான் காரணம்
நடராஜனுக்கு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் முன்னர் அவருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா கடந்த 28-ஆம் தேதியே பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார். எனினும் தமிழக அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக அவருக்கு பரோல் கிடைக்க தாமதமாகியது என தினகரனும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.
தீபா பதிலடி
சசிகலாவுக்கு பரோல் தாமதமாக கிடைக்க காரணமாக இருந்தவர் முதல்வர் பழனிச்சாமி என்று தினகரன் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் தீபாவோ முதல்வருக்கு ஆதரவாக பதில் கூறியுள்ளார்.
முதல்வர் தான் காரணம்
இதுகுறித்து தீபா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில் சசிகலாவுக்கு பரோல் கிடைக்க காரணமாக இருந்தவரே முதல்வர் எடப்பாடிதான். மக்கள் விரும்பினால் முதல்வருடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளேன் என்றார். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சியில் தீபா கூறுகையில் எடப்பாடியும், தினகரனும் அதிமுக தொண்டர்களை ஏமாற்றி வருகின்றனர். பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என்றார்.
மனமாறிய தீபா
ஆனால் அடுத்த சில நாட்களில் ஸ்ரீரங்கம் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, மக்களும், தொண்டர்களும் விருப்பப்பட்டால் முதல்வருடன் இணைந்து பணியாற்ற தயார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் தனக்கே என்று கூறி தேர்தல் ஆணையத்தில் தீபா தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களையும் அவர் வாபஸ் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தீபா இதை மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.