ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும்- ஓபிஎஸ்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை : சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உயர்த்தியுள்ள போர்க்கொடி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரும் பதிலடி கொடுத்து வருகிறார். சசிகலாவும், அமைச்சர்களும் தன்னை அவமானப்படுத்தினர் என்றும் அதனால் மன வருத்தத்திற்கு ஆளானதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இன்று சசிகலாவிற்கு ஆதரவாக எத்தனை எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர் என்பதே குழப்பமாக உள்ளது. எம்எல்ஏக்களை பத்திரமாக பாதுகாத்து தங்க வைத்துள்ளனர்.
இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலை முதல் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் முதல்வருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில அமைச்சர்கள் பேசியது வருத்தம் அளித்தது என்றார்.

ராஜினாமாவிற்கு வற்புறுத்தல்
ராஜினாமா செய்ய தம்மை வற்புறுத்தியபோது கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காடினேன், ஆனால் நான் இரண்டு மணி நேரம் பேசினேன். நான் அம்மாவின் நினைவிடத்திற்கு போய் பிரார்த்தனை செய்து விட்டு வருவதாக கூறினேன். ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. என் கருத்தை ஏற்காததால் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டேன் என்று தெரிவித்தார்.

சமூக சேவை செய்ய நினைத்தேன்
நான் ஊருக்கு போகிறேன். சமூக சேவை செய்யப் போவதாக கூறினேன். அதற்கும் சம்மதிக்கவில்லை. கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே சசிகலாவை ஆதரித்தேன். கடைசியாக நான் கலந்து கொண்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதற்கான சுவடும் இல்லாமல் இருந்தேன் என்றார்.

மரியாதை கொடுத்த ஜெயலலிதா
ஜெயலலிதா இருந்தபோது நடந்த எம்எல்ஏக்கள் கூட்டங்களில் தமக்கு உரிய மரியாதை தரப்பட்டது கடந்த முறை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற போது என்னை எதிர்வரிசையில் அமரவைத்து அவமானப்படுத்தினார்கள். அது என்னை காயப்படுத்தியது. நான் மனதில் வைத்து புதைத்துக் கொண்டேன். முதலமைச்சருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில அமைச்சர்கள் பேசியது வருத்தம் அளித்தது அதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நான் இருந்தேன்.

ஜெ.வீடு நினைவு இல்லமாகும்
ஜெயலலிதா குடியிருந்த வீடு நினைவு இல்லமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பயன்படுத்திய நூலகம், கார் முதற்கொண்டு பார்வைக்கு வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது வெகு விரைவில் நடைபெறும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். காமராஜர் வாழ்ந்த வீடு போல, பாரதியார் வாழ்ந்த வீடு போல ஜெயலலிதா வாழ்ந்த வீடும் நினைவு இல்லமாக்கப்படும் என்றார்.

தனி கட்சி தொடங்க மாட்டேன்
என்னை ஆதரிப்பவர்களுக்கு என்னை தொடர்பு கொள்வதற்காக தனி தகவல் தொடர்பு, தொலைபேசி எண்களை அளிப்போம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications