ஜெயலலிதாவுக்கு 1.5 கோடி கடன் கொடுத்த சசிகலா! (ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தொடர்)
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் 25 நாட்கள் வாதாடி தனது கட்சிக்காரர் தரப்பில் இருந்த நியாயத்தை எடுத்து கூறிவிட்டார்.
இவரைத் தொடர்ந்து ஏ2 அதாவது சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் தனது வாதத்தைத் தொடங்கினார்.
இந்த வழக்கில் என் மனுதாரர் சசிகலா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, அவர் தொடங்கியுள்ள கம்பெனிகளுக்கு ஜெயலலிதா பணம் கொடுத்தார் என்பதுதான் என்று ஆரம்பித்த அவர், ஜெயலலிதா, சசிகலா இடையேயான நட்பினை குறிப்பிட்டுக் காட்டினார்.
ஜெயலலிதா - சசிகலா இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களில் இருவரும் பங்குதாரர்கள். வழக்கு காலகட்டத்துக்கு முன்பே என் மனுதாரர் பல பிசினஸ்களை நடத்தி வந்தார்.
சசிகலா நடத்திய நிறுவனங்கள்
1986 ஆம் ஆண்டு வினோத் வீடியோ விஷன் தொடங்கி, அதன் பிறகு மெட்டல் கிங், கிரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ ரியல் எஸ்டேட், ஜெ.எஸ். ஹவுஸிங், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக் ஷன், சக்தி கன்ஸ்ட்ரக் ஷன் உள்ளிட்ட 19 கம்பெனிகளில் சசிகலா பங்குதாரராக உள்ளார். இவை அனைத்தும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே தொடங்கப்பட்டவை.
பணம் வாங்கியதற்கு ஆதாரம்
ஜெயலலிதாவின் பணத்தில் சசிகலா இந்தக் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். ஜெயலலிதாவின் பணத்தை சசிகலா பங்குதாரராக உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சமர்பிக்கவில்லை. ஆக, ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா பணம் வாங்கினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!
சொத்து வாங்காத சசி
மேலும், வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கிய சொத்துகளை வழக்கு காலகட்டத்தில் வாங்கியதாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். வழக்கு காலகட்டத்தில் எந்த சொத்தும் சசிகலா வாங்கவில்லை.
மிகைப்படுத்தப்பட்ட மதிப்பு
அப்போதைய அரசின் உத்தரவுபடி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய பொறியாளர்களை வைத்து என் மனுதாரர் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் கட்டிட மதிப்புகளை மிகைப்படுத்திக் காட்டி இருக்கின்றனர். எனவே, என் மனுதாரர் பங்குதாரராக இருக்கும் கம்பெனிகளின் சொத்து மதிப்பீடு பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. சசிகலா குற்றமற்றவர்!'' என்று வாதிட்டார்.
வருவாய் ஈட்டிய சசி
தொடர்ந்து வந்த நாட்களில் வாதிட்ட மணிசங்கர், சசிகலாவுக்கு 1991-96 காலகட்டத்தில் 30 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. அவர் ஜெயலலிதாவிடமிருந்து பணம் பெறவில்லை. சசிகலாதான் ஜெயலலிதாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளார் என்றும் வாதிட்டார். அதோடு மட்டுமல்லாது சசிகலாவின் வருமானத்தில் இருந்து அப்போது ''இளவரசிக்கு 45 லட்சமும், சுதாகரனுக்கு 16 லட்சமும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சசிகலாவின் நகைகள்
சசிகலாவுக்குச் சொந்தமான 31.3.1991-ல் வாங்கப்பட்ட 62 தங்க நகைகளின் மதிப்பு 9,38,460 எனவும், 16.1.92-ல் வாங்கிய 34 தங்க நகைகளின் மதிப்பு 17,54,868 எனவும் பொதுப்பணித் துறை அதிகாரி ஸ்ரீஹரி குறிப்பிட்டுள்ளார். இந்த நகைகள் அனைத்தும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. இதை வருமான வரித்துறையில் காட்டி அதற்கு வரியும் கட்டியிருக்கிறோம்.
வருமானம் வந்த வழி
1992-93-ல் தொழில் நிறுவனங்கள் மூலமும் விவசாயம் மற்றும் கட்டிட வாடகை மூலமும் கிடைத்த ஆண்டு வருமானம் ரூபாய் 4,41,615. அதே காலகட்டத்தில் என் மனுதாரர் சசிகலாவுக்கு வெளிநாட்டில் இருந்து பரிசாக வந்த தொகை ரூ.51,47,955.
காளான் பயிரிட்ட சசிகலா
சசிகலா தன் விவசாய நிலத்தில் காளான் பயிரிட்டதில் கிடைத்த வருமானத்தையும் கணக்கில் காட்டாமல் மறைத்துவிட்டனர். 1989 முதல் 1990-ம் ஆண்டில் ராமச்சந்திரனுக்கு 5,96,000 ரூபாயும், சுப்ரமணிக்கு 2,25,000 ரூபாயும், நாகம்மாளுக்கு 8,70,000 ரூபாயும் கடன் கொடுத்திருந்தார். அதை 1991 முதல் 1992 வரை அவர்கள் சசிகலாவிடம் திரும்பக் கொடுத்தார்கள். அதையெல்லாம் கணக்கில் காட்டாமல் மறைத்திருக்கிறார்கள்.
சாதகமான ஆவணங்கள்
தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் வீட்டில் ஆய்வு செய்து அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். அதில் அவர்களுக்கு சாதகமாக இருந்த ஆவணங்களை மட்டுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள். எங்களுக்கு ஆதரவாக இருந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர்.
ரூ.30 கோடி வருமானம்
சசிகலாவுக்கு வழக்கு காலகட்டமான ஐந்து ஆண்டுகளில் கிடைத்த மொத்த வருமானம் 30,30,22,575. இதில் இருந்து என் மனுதாரர் சசிகலா, ஜெயலலிதாவுக்கு ஒரு கோடியே 50 லட்சம் கடனாக வழங்கினார்.
தொழில் தொடங்க கடன்
சுதாகரன் தொழில் தொடங்கவும் இளவரசி தொழில் தொடங்கவும் சசிகலா கடன் கொடுத்தார்'' என்று விரிவாகச் சொன்னார் வழக்கறிஞர் மணிசங்கர். இவரின் வாதம் நிறைவுக்கு வரும் முன்பே இளவரசி, சுதாகரன் தரப்பு வாதம் தொடங்கியது அதுபற்றி நாளை பார்க்கலாம்.