தமிழக மாணவர்கள் மீது "நீட்" தேர்வை திணிக்கக் கூடாது.. மோடிக்கு சசிகலா கடிதம்
சென்னை: தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியதால் 'நீட்' தேர்வில் விலக்கு பெற பிரதமருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ மேற்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டாயம் என்று தீர்ப்பளித்துள்ள 'நீட்' தேர்வு எழுதுவதில் இருந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டசபையில் 2 மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டங்களை கற்றுவருகின்றனர். 'நீட்' தேர்வு மத்திய அரசின் பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) அடிப்படையாக கொண்டது. இது தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பாதகமான ஒன்றாகும்.
முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கையில் தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமையும், மலைப்பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கொடுத்து வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு 2 மசோதாவை நிறைவேற்றிய நிலையில் 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழகத்துக்கு உங்களுடைய உதவி தேவை. உங்களுடைய உதவிக்கு தமிழக மக்களும், மாணவர்களும், குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களும் மிகவும் நன்றிகரமாக இருப்பார்கள்.
என்னுடைய கட்சியான அ.தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.