கருணாநிதி உடல் நிலை பற்றி ராஜாத்தியம்மாளிடம் கேட்டறிந்த சசிகலா !
ராஜாத்தியம்மாளை தொடர்புகொண்டு கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்திருக்கிறார் சசிகலா.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து, அவரது துணைவியார் ராஜாத்தியம்மாளிடம், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க தலைவர் கருணாநிதி ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடம்பில் ஏற்பட்ட கொப்பளங்கள் குணமாவதற்கு சிகிச்சைகள் முழுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் சரியான நேரத்துக்கு மருந்துகள் அவருக்கு தரப்படாத நிலையை கருத்தில் கொண்டே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது அவரது உடல்நலம் முன்னேற்றமடைந்துள்ளது.
பெங்களூரிலுள்ள செல்வியின் வீட்டுக்கு ஓய்வெடுக்க கருணாநிதியை கொண்டு செல்வதற்கு வசதியாகவே சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. சுகரும் பி.பி.யும் அவருக்கு இல்லை என்பதால் அவரை குணப்படுத்துவது எளிது என்கிறார்கள் மருத்துவர்கள். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் நலம் விசாரித்து வருகிறார்கள்.
இருப்பினும் மிக முக்கியமான ஒருவர் விசாரித்திருப்பது தான் திமுக வட்டாரத்தில் முக்கியமாக பேசப்படுகிறது. அதாவது, ராஜாத்தியம்மாளை தொடர்புகொண்டு கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்திருக்கிறார் சசிகலா. இந்த விசாரிப்புத்தான் திமுகவில் ரகசியமாக பேசப்படுகிறது. ஜெயலலிதாவின் உடல்நலத்தை விசாரிக்க அப்பல்லோ சென்று சசிகலாவை சந்தித்து நீண்ட நேரம் பேசிவிட்டு வந்தவர் ராஜாத்தியம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.