ஓபிஎஸ்ஸை தொடர்ந்து சோவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா!
மறைந்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதல்வர் பன்னீர்செல்வமும் அஞ்சலி செலுத்தினார்.,
சென்னை: மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு சசிகலா நடராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் சோ. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர் ஆதிக்கத்தை எதிர்த்தும் வந்தார் சோ.

சசிகலா தரப்பு மீது ஜெயலலிதா அதிருப்தியை வெளிப்படுத்தும் நேரங்களில் சோவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் ஜெயலலிதா. 2011-ம் ஆண்டு சசிகலா போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசம் இருந்த 9 நிறுவனங்களுக்கு சோ எம்டியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்தபோது சோ அனைத்தில் இருந்தும் விலகினார்.
இந்த நிலையில் ஜெயலலிதா நேற்று முன்தினம் காலமானார். இன்று அதிகாலை சோவும் காலமானார். நெருங்கிய நண்பர்களான இருவருமே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சோவின் உடலுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் சசிகலா திடீரென சோ வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications