ஓபிஎஸ் வீட்டு முன் ஒட்டப்பட்ட சசி போஸ்டர்கள் கிழிப்பு.. தீபா ஆதரவாளர்களா.. சென்னையில் பரபரப்பு
சென்னை கிரீன் வேஸ் சாலையில் ஒட்டப்பட்ட சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. 2 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை கிரீன் வேஸ் சாலையில் ஒட்டப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீடு சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ளது. அவரது வீட்டிற்கு முன் உள்ள சுவற்றில் சசிகலாவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை யாரோ கிழித்து எறிந்து விட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, போஸ்டர்களை கிழித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அபிராமபுரம் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீபாவின் ஆதரவாளர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தெரிய வரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா தலைமைக்கு வருவதை அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் பலர் விரும்பவில்லை. அப்போதில் இருந்தே சசிகலாவின் போஸ்டர்கள் பல இடங்களில் கிழிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்துள்ளதால் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சசிகலாவின் போஸ்டர்கள் எங்கு ஒட்டப்பட்டாலும் அதனை தீபாவின் ஆதரவாளர்கள் கிழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications