சசிகலா புஷ்பா அதிரடி- வீடியோ மூலம் அதிமுகவினருக்கு வேண்டுகோள்- சசிகலா மீது பாய்ச்சல்! exclusive
சசிகலா புஷ்பா இன்று ஊடகங்களுக்கு அனுப்பிய வீடியோவில் சசிகலா நடராஜன் தரப்பை சாடியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு கும்பல் சதி செய்ததாக சசிகலா தரப்பு மீது காட்டம் காட்டியுள்ளார். அத்துடன் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் சசிகலா புஷ்பா.
இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் சசிகலா புஷ்பா பேசியுள்ளதாவது:
லட்சக்கணக்கான கழகத் தொண்டர்களின் குரலாய் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச்செயலர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கட்சிப் பதவிக்கு களங்கமும் ஆபத்தும் விளைவிக்க ஒரு கும்பல் சதி செய்ததை கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக முறியடித்தேன்.
எதிர்பாராத அதிர்ச்சியில் தங்களது கனவு தகர்க்கப்பட்டதால் அந்த கும்பல் என்னை பழிவாங்க தொடர்ச்சியாக பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது.
எத்தகைய நெருப்பாற்றிலும் நீந்தும் சக்தியும் துணிவும் எனக்கு உண்டு. எத்தகைய மிரட்டலுக்கும் சற்றும் அஞ்சாமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு எந்த சூழ்நிலையிலும் சதியை முறியடிப்பேன்;
அதுபோல அரசியலமைப்புச் சட்டப்படி மாண்புமிகு அம்மா அவர்களின் முதல்வர் பதவிக்கு எந்தவித பிரச்சனையும் வராமல் பாதுகாத்து மக்கள் உணர்வுக்கு மதிப்பும் நட்புக்கு மரியாதையும் காட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு தொண்டர்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்து கழகத்தின் வெற்றியைத் தேடித் தர தஞ்சாவூர், அரவங்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு வாக்காள பெருமக்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யார் மீதும் காட்டாமல் எனது மக்கள் பணி துணிவுடன் தொடரும். நன்றி.
இவ்வாறு சசிகலா புஷ்பா பேசியுள்ளார்.