போயஸ் கார்டனில் காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தனர்... சசிகலா புஷ்பா குமுறல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் தாம் தாக்கப்பட்டதுடன் போலீசாரிடம் லத்தியை கொடுத்தும் அடிக்க வைத்தனர்.. அப்போது என் காலில் ரத்தம் கொட்டியது என்று வழக்கறிஞர்களிடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா குமுறியுள்ளார்.
சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் சசிகலா புஷ்பா வரும் 29-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமது வழக்கறிஞர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா குமுறலுடன் கூறியதாவது:
முன்ஜாமீன் மனுவில் உள்ள கையெழுத்து தொடர்பான சந்தேகத்தை தெளிவுபடுத்த நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கெல்லாம் நேரில் ஆஜராக தேவையில்லை. உச்சநீதிமன்றத்துக்கு சென்றாவது எப்படியும் முன்ஜாமீன் வாங்கிவிடுவேன்.
முன்ஜாமீன் வாங்காமல் தமிழ்நாட்டுக்குள் ஒருபோதும் கால் வைக்க மாட்டேன். போயஸ் கார்டனில் நடந்ததை அப்படி எல்லாம் சீக்கிரமாக மறந்துவிட முடியாது.
"அவர்கள்" என்னை அடித்ததுடன் போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள்..... காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள்.
அதனால்தான் ராஜ்யசபாவில் பேசினேன். நான் வாங்கிய அடிகளுக்கு பதில் வேண்டும்.. இப்போது சமரசம் பேசுகிறார்கள்..
எனக்கு ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை.. எல்லாம் நான் வணங்கிய கடவுள் கொடுத்தது..
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications