வக்கீல் வீடு தாக்குதல்- மதுரை ஹைகோர்ட் கிளையில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் கோரி மனு!
மதுரை: நெல்லை வழக்கறிஞர் சுகந்தியின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் தமக்கு முன்ஜாமீன் கோரி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்த பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் நெல்லை திசையன்விளையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகந்தி. சசிகலா புஷ்பா மீதான வழக்குகளை வாபஸ் பெற புகார் கொடுத்த பணிப்பெண்கள் ஒப்புக் கொண்டிருந்தனர்.
ஆனால் குறிப்பிட்ட நாளில் அந்த பணிப் பெண்கள் காவல்நிலையத்துக்கு வரவில்லை. அதேநேரத்தில் பெண்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் சுகந்தி வீடு மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஹரிநாடார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் தம்மை கைது செய்யாமல் இருக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.