சசிகலா எத்தனை விரதம் இருந்தாலும் செய்த பாவத்தை போக்க முடியாது- தமிழிசை பொளேர்
சசிகலா எத்தனை விரதம் இருந்தாலும் செய்த பாவத்தை போக்கவே முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: சசிகலா சிறையில் எத்தனை விரதம் இருந்தாலும் அவர் செய்த பாவத்தை போக்கிவிட முடியாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய விசாரணையில் இதுவரை 20 பேரிடம் அவர் விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில் சசிகலாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியது.
ஆனால் சசிகலாவோ தனது மீது புகார் கொடுத்தவர் யார் என்று சொன்னால் மட்டுமே தன்னால் ஆஜராக முடியும் என்று ஆறுமுகசாமிக்கு தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துவிட்டார். இதனிடையே கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் முதல் சசிகலா சிறையில் மௌன விரதம் இருந்து வருவதாக தினகரன் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டில் அவரும் அவரது குடும்பத்தினரும் ரூ. 4500 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போயஸ் கார்டனில் சசிகலா அறையில் சோதனையிட்ட போது குட்கா ஊழல் தொடர்பாக சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன இந்த இரு விவகாரங்கள் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என வருவாய் துறையினர் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அவரோ பிப்ரவரி 10-ஆம் தேதி வரை தான் மவுன விரதத்தில் இருப்பதால் தன்னால் எந்தவித விசாரணையிலும் கலந்து கொள்ள இயலாது என்று பதில் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது சசிகலா எத்தனை விரதங்கள் இருந்தாலும் அவர் செய்த பாவத்தை போக்கவே முடியாது என்று பதிலளித்தார்.