நாஞ்சில் சம்பத் விலகல்- தினகரனை விளாசிய சசிகலா... உதவியாளர் ஜெகஜ்ஜால 'ஜனா' மீதும் புகார்!
நாஞ்சில் சம்பத் விலகியதில் தினகரன் மீது சசிகலா ரொம்பவே கோபத்தில் இருக்கிறாராம்.
Recommended Video
சென்னை: தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதை சசிகலாவால் ஜீரணிக்க முடியவில்லையாம். நாஞ்சில் சம்பத்தை மீண்டும் சேர்க்க சமாதானம் பேசித்தான் ஆக வேண்டும் என தினகரனுக்கு கறார் உத்தரவிட்டிருக்கிறாராம் சசிகலா.
அதிமுகவில் சசிகலா தலையெடுத்த போது ஒதுங்கிக் கொண்டவர் நாஞ்சில் சம்பத். பின்னர் சசிகலா தலைமையை ஏற்றார். அதன் பின் தினகரனின் தலைமையையும் ஏற்றுக் கொண்டார்.
தினகரனை மக்களின் தலைவராக, திராவிடத்தின் தலைவராக வழிபாட்டுக்குரியவராகவே போற்றி வந்தார் நாஞ்சில் சம்பத். அப்படிப்பட்ட விசுவாசியாக வலம் வந்த நாஞ்சில் சம்பத் திடீரென தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டார்.
சசிகலா மீது மரியாதை
ஆனாலும் சசிகலா மீதும் மறைந்த நடராஜன் மீதும் அன்போடு இருக்கிறார் நாஞ்சில் சம்பத். சசிகலாவை இப்போதும் 'சின்னம்மா' என்றே அழைத்து உருகிறார் நாஞ்சில் சம்பத். பரோலில் வந்துள்ள சசிகலாவிடம் நாஞ்சில் சம்பத் விவகாரம் பேசப்பட்டிருக்கிறது.
தினகரனிடம் சீறிய சசிகலா
நாஞ்சில் சம்பத் போன்றவர்களை தினகரன் கைவிட்டது ஏற்கவே முடியாது என கோபத்தை கக்கியிருக்கிறார் சசிகலா. அப்போதுதான் என்ன நடந்தது என்கிற விவரமும் நாஞ்சில் சம்பத் தரப்பில் சசிகலாவுக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது.
தடுத்த ஜெகஜ்ஜால ஜனா
அதாவது தினகரனை நாஞ்சில் சம்பத் சந்திப்பதையும் உதவிகள் பெறுவதையும் உதவியாளர்களான ஜெகஜ்ஜால ஜனாவும் பிரபுவும் விரும்புவதில்லையாம். இவர்கள்தான் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சீனியர்கள், தினகரனை சந்திக்கவிடாமல் தடுத்து வருகின்றனராம்.
தவிப்பை ரசித்த தினகரன்
இப்படி சீனியர்கள் தம்மை சந்திக்க முடியாமல் தவிப்பதை, எம்ஜிஆராக கருதிக் கொண்டிருக்கும் தினகரன் ரொம்பவே ரசிக்கவும் செய்திருக்கிறார். இதனால் நாஞ்சில் சம்பத் விலகியதை பற்றியும் தினகரன் கவலைப்படவும் இல்லையாம். இந்த தகவல்கள் சசிகலாவை கொதிப்படைய வைத்துவிட்டதாம். என்ன செய்வீர்களோ, நாஞ்சில் சம்பத்திடம் சமாதானம் பேசுங்கள் என இப்போது தினகரனுக்கு கறார் உத்தரவை பிறப்பித்திருக்கிறாராம் சசிகலா. தினகரனும் 'ஆகட்டும்' என தலையாட்டிக் கொண்டிருக்கிறாராம்.