மயிலை கோலவிழியம்மன் கோவில் கும்பாபிஷேகமும்... சசிகலா நடத்திய சண்டியாகமும்
சென்னை: மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்ய வந்த சசிகலாவிற்கு ராஜமரியாதை அளிக்கப்பட்டது. ஆகம விதிகளை மீறி அவர் மகா சண்டியாகம் நடத்தியதாகவும், ஆலய நிர்வாகிகள் பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுடன் இணைந்த கோலவிழி அம்மன் கோயிலில் ரூ.50 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று இரவு திடீரென கோலவிழி அம்மன் கோயிலுக்கு வந்தார். அப்போது அவருக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது.

சசிகலாவின் வருகையையொட்டி கோயிலை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவருக்கு பல சிறப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தன.
ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் ஏற்பாடு நடைபெறும் போது அது முடிந்த பின்புதான் கோயிலில் பூஜை செய்வது வழக்கம். ஆனால் கோயில் விதிகளை மீறி முதல்வர் ஜெயலலிதாவிற்காக நேற்று கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு சண்டி யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதலே பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் போலீசார் கடும் கெடுபிடி செய்தனர். இதனால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இன்றும் சசிகலா வரவுள்ளதாக வந்த தகவல் தான் போலீசாரின் இந்த கெடுபிடிக்கு காரணம் என்று கூறப்பட்டது.
கோயிலை சுற்றிலும் பொதுமக்கள் யாரும் எளிதில் செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக முக்கிய விஐபிக்கள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் கொதிப்படைந்தனர். கும்பாபிஷேகத்தை பார்வையிட முடியாமல் சாதாரண பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் சசிகலா இன்று கோவிலுக்கு வரவில்லை. வராத நபருக்காக எதற்கு இத்தனை கெடுபிடி செய்யவேண்டும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று சசிகலா தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று சிறப்பு பிராத்தனைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications