தென்காசி இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா தரிசனம்! அகஸ்தியர் பீடத்தில் தியானம்.. பலமான வேண்டுதல்?
தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
சசிகலாவுக்கு கடவுள் பக்தி அதிகம். சிறையிலிருந்து வெளியே வந்த போதும் ஓசூர் எல்லையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டு வந்தார். ஜெயலலிதாவுடன் இருக்கும் போது ஸ்ரீரங்கம், திருப்பதி, உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வருவார்.
தற்போது அதிமுக 4 தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ஓபிஎஸ்
சசிகலா இதுவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தையோ இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியையோ சந்தித்து அதிமுகவை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டதில்லை. ஆனால் தேர்தல் தோல்வி உள்ளிட்டவைகளால் தானாக அதிமுக சசிகலா கையில் வரும் அளவுக்கு தற்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அதிமுக தோல்வி
தொடர்ந்து அதிமுக தோற்பதும் அங்கிருந்து தொண்டர்கள் விலகி மாற்றுக் கட்சிகளில் இணைவதையும் பார்த்த சசிகலா இனியும் பொறுத்திருக்க முடியாது என நினைத்து தென் மண்டலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அப்படி திருச்செந்தூர் சென்றவர் அங்கு முருகனை தரிசனம் செய்தார்.

ஓ பன்னீர் செல்வம்
அவரை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ ராஜா நேரில் வந்து சந்தித்து அதிமுகவை தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் அவர் நேற்றைய தினம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓ ராஜா, என்னை நீக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

4 தேர்தல்களில் தோல்வி
கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான். இவர்கள் இருவரும் சேர்ந்து கட்சியையே நாசப்படுத்திவிட்டார்கள். 4 தேர்தல்கள் நடந்துள்ளன. இதுவரை ஏதாவது வளர்ச்சி இருந்ததா ஒன்றுமில்லை. எனவே அதிமுகவை சசிகலா தலைமையேற்க வேண்டும் என ஆணித்தரமாக தெரிவித்தார் ஓ ராஜா.

சசிகலாவுடன் சந்திப்பு
இந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். தென்மாவட்டத்தில் முகாமிட்டுள்ள சசிகலா தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள இலஞ்சிகுமரன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து ஆலயத்தை ஒட்டியுள்ள அகஸ்தியர் பீடத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார்.
Recommended Video

15 நிமடம் தியானம்
இதையடுத்து அவர் தியானத்தில் 15 நிமிடங்கள் அமர்ந்திருந்தார். பின்னர் தொண்டர்களின் வரவேற்புக்கு மத்தியில் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். அதிமுகவை கைப்பற்ற தற்போது தென் மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு செல்லும் சசிகலா தெய்வ வழிபாட்டையும் அதிகரித்து கடவுள் மேல் பாரத்தை போட்டு முழு வீச்சில் இறங்கிவிட்டார் என்றே சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications