வங்கிக்குள் வைத்துப் பூட்டிய மக்கள்.. வேலைப்பளு.. மன அழுத்தம்.. எஸ்.பி.ஐ. மேனேஜர் பரிதாப மரணம்!
நவம்பர் 9ம் தேதி முதல் இடைவிடாமல் வேலை பார்த்து வந்ததால் மன உளைச்சல், மன அழுத்தம் காரணமாக ஆந்திராவில் பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் பழைய ரூபாய் நோட்டு மாற்ற விவகாரத்தில் தொடர்ந்து வேலை செய்து வந்ததாலும், மன அழுத்தம் ஏற்பட்டதாலும், பொதுமக்கள் வங்கி ஊழியர்களை வங்கிக்குள் வைத்துப் பூட்டி மன உளைச்சல் கொடுத்ததாலும், ஒரு வங்கி துணை மேலாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்னும் எத்தனை உயிர்கள் போகப் போகின்றதோ இந்த ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு என்று வேதனைப்படும் அளவுக்கு தொடர்ந்து உயிர்ப்பலிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளர் ஒருவர் ஆந்திராவில் உயிரிழந்துள்ளார்.
அவரது பெயர் ஷெரீப். நெல்லூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக இருந்து வந்தார். 46 வயதான ஷெரீப், நவம்பர் 8ம் தேதி முதல் கடுமையான வேலைப் பளுவில் சிக்கியிருந்தார்.
நாட்டில் உள்ள பிற வங்கி ஊழியர்களைப் போலவே இவருக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. கடுமையான வேலைப்ப்ளுவுடன் பொதுமக்களின் கோபத்தையும் தாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஷெரீப்.
2 நாட்களுக்கு முன்பு கூட தனது ஜாகிரிடம் வேதனைப்பட்டுப் பேசியுள்ளர் ஷெரீப். எனக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. மன உளைச்சலாக உள்ளது. கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதை விட முக்கியமாக சில நாட்களுக்கு முன்பு பணம் மாற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அனைத்து ஊழியர்களையும் உள்ளே வைத்து பூட்டி விட்டனர் பொதுமக்கள். போலீஸ் வந்து ஊழியர்களை மீட்டது.
இந்த சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தார் ஷெரீப். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தபோது அப்படியே சாய்ந்து விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் ஷெரீப்.
நவம்பர் 9ம் தேதி முதல் தொடர்ந்து காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை பார்த்து வந்தார் ஷெரீப் என்று அவரது தந்தை கூறியுள்ளார். மரணமடைந்த ஷெரீப்புக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.