மு.க.ஸ்டாலின் மீதான நிலஅபகரிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலுக்கு எதிராக தமிழக அரசு தொடந்த நில அபகரிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையை சேர்ந்த சேஷாத்திரி என்பவர், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தேனாம்பேட்டையில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும், வேணுகோபால்ரெட்டி என்ற பெயருக்கு மிரட்டி வாங்கி பதிவு செய்து கொண்டதாகவும் அதனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார்.
பின்னர் இந்த வழக்கில் சமரசம் செய்து கொண்டதாக மு.க.ஸ்டாலின், சேஷாத்திரி ஆகிய இருவரும் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனால் அந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் உயர்நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டாலும், இது குற்ற வழக்கு என்பதால், இதில் விசாரணை நடத்தி மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனாபிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மு.க.ஸ்டாலின், உதயநிதி தரப்பில் ஆஜரான வக்கீல் அந்தியார்ஜுனா வாதாடுகையில், ‘இந்த வழக்கு முற்றிலும் அரசியல் நோக்குடன் ஜோடிக்கப்பட்டதாகும். நிலத்தை வாங்கியவர் மற்றும் விற்றவர் ஆகிய இருவரும் ஏற்கனவே வழக்கை வாபஸ் பெறுவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் தமிழக அரசு வேண்டுமென்றே இருவரையும் மீண்டும் இழுக்க முயற்சிக்கிறது.
இதுபோன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் இரு தரப்பினரும் சமாதானம் செய்து கொண்ட பிறகும் இப்படி வழக்கு தொடர்ந்ததாக சரித்திரம் இல்லை. விற்றவர்-வாங்கியவர் இருவரும் சமாதானம் செய்து கொண்ட பிறகு இப்படி மேல் முறையீடு செய்வது பழிவாங்கும் செயலாகும்' என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் சேகர் நாப்டே, ‘இந்த வழக்கில் இரு தரப்பினரும் சமரசமாகி வாபஸ் பெற்றாலும், இது குற்ற நடவடிக்கை தொடர்பான வழக்கு என்பதால் இதன் மீது கண்டிப்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதுபோன்ற வழக்குகளின் மீதான தீர்ப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், இந்த குறிப்பிட்ட வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு மறுவிசாரணை நடத்த தயங்கக் கூடாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதியில் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.