ஜெ. குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு நியாய உணர்வுடைய அனைவருக்கும் ஏற்புடையது... கருணாநிதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு நியாய உணர்வுடைய அனைவருக்கும் ஏற்புடையது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதையே இவ்வாறு தெரிவித்துள்ளார் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பரபரப்பான தீர்ப்பு
30-1-2014 அன்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான ஒரு தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பு அன்றைய மாலைப் பத்திரிகைகளில் ஒரு வரிகூட வெளியிடப்படவில்லை. தமிழ் முரசு இதழிலே மட்டும் அந்தச் செய்தி வந்துள்ளது. அதுகூட மிகவும் குறைக்கப்பட்டு ஓரளவிற்குத்தான் வெளிவந்துள்ளது. அந்தத் தீர்ப்பு எந்த வழக்கிலே தெரியுமா?

ஜெயலலிதா,சசிகலா சம்பந்தப்பட்டது
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கு அது. ஜெயலலிதா மற்றும் அவரது சகோதரி சசிகலா ஆகியோர் மீது மத்திய வருமான வரித் துறை கடந்த 96ஆம் ஆண்டு எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாததால்
1991-92, 1992-93 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை அவர்கள் தாக்கல் செய்யவில்லை என்ற குற்றத்துக்காக அந்த வழக்கு 21-8-1997 அன்று தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித் துறையினர் குறிப்பிட்டுள்ள அந்தக் கால கட்டத்தில் தனக்கு வருமானம் இல்லை எனவும், அதனால் கணக்கு தாக்கல் செய்யவில்லை எனவும், ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை வருமான வரித் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

வருமானம் இல்லாத காலத்திற்கும் கணக்கு
வருமான வரி சட்டப்படி வருமான வரி செலுத்து பவர்கள் வருமானம் இல்லாத காலத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும் என்பதுதான் சட்டம். இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று கீழ்க் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பினர் முறையீடு செய்ததை 14-6-2006 அன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்பீல் செய்து.. அதுவும் தள்ளுபடி
அதன் பிறகு ஜெயலலிதா தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து, அதுவும் 2-12-2006 அன்று தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனவே இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

மேல் முறையீடும் இப்போது தள்ளுபடி
உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீடுதான், உச்சநீதிமன்றத்தினால் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் வருமான வரி வழக்கை ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டும் என்றும் இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.

குற்றமே
மேலும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் "வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் தவறாமல் வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அப்படித் தாக்கல் செய்யாததே குற்றமாகும். வருமான வரித் துறையினர் வழங்கும் ஒவ்வொரு உத்தரவும் மேல்முறையீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி மேல் முறையீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வுகள் குறித்த விவரங்கள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கும் போது எந்த அளவுக்கு இந்த வழக்கில் வேண்டு மென்றே தாமதத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

நீதிமன்றங்களைப் பயன்படுத்தாதீர்கள்
எனவே இனி அனைத்து நீதிமன்றங்களும் குற்றம் செய்பவர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளைத் தாமதப்படுத்துவதற்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்த்திட வேண்டும்" என்று தங்கள் தீர்ப்பில் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

தீர்ப்பைப் பார்க்கும்போது
நீதிபதிகள் தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போது, பெரிய பொறுப்புகளிலே இருப்போர் மீது வழக்குகள் வந்தால், தாங்கள் பொறுப்பிலே இருக்கும்போது அந்த வழக்குகள் நடைபெற வேண்டுமென்றும், வேறு கட்சிகள் ஆட்சியிலே இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வருமேயானால், அந்த வழக்கு விசாரணையை எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிக்க முடியுமோ, அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதையும், பொறுப்பிலே இருக்கும்போதே வழக்கு விசாரணைக்கு வந்தால்கூட, தங்களுக்கு ஒத்துழைக்கக் கூடியவர்களே நீதிபதிகளாக நீடிக்க வேண்டு மென்றும், அவர்கள் ஓய்வுபெற நேர்ந்தால் கூட, அவர்களே தங்கள் வழக்கினை விசாரிக்க வேண்டும்.

நியாய உணர்வுடைய அனைவருக்கும்
எதிர்த் தரப்புக்கு ஆஜராகக்கூடிய வழக்கறிஞர்களும் தங்களுக்கு வேண்டியவர்களாக, அல்லது தாங்கள் சொல்கிறபடி நடப்பவர் களாக இருக்க வேண்டுமென்றும் நினைத்து, அதற்கேற்ப உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்துவதையும் நாம் கண்ணால் கண்டு வருவதால், நீதிபதிகள் தற்போது உத்தரவு பிறப்பித்திருப்பது நியாய உணர்வுடைய அனைவருக்கும் ஏற்புடைய கருத்தாகத்தானே உள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications