தேர்தல் விதிமீறல்... வாகனச் சோதனையில் ஜெ. படம் போட்ட ஸ்கூல் பேக்குகள் பறிமுதல்
தக்கலை: குலசேகரம் அருகே முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டிருந்த ஸ்கூல் பேக்குகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரவலாக வாகனச் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையில் நேற்று குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவ்வழியே வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த ஜீப்பில் கோதையாறு அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீகுமாரி, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் இருந்தனர். மேலும் பள்ளிகளில் அரசு இலவசமாக வழங்கும் ஜெயலலிதாவின் படம் பொறிக்கப்பட்டிருந்த ஸ்கூல் பேக்குகள், பாக்ஸ்கள், செருப்புகள் போன்றவையும் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இதையடுத்து அந்த பொருட்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.