பள்ளிக்கு வந்த பிளஸ்-1 மாணவி கர்ப்பம் கலைந்து மயங்கி சாய்ந்தார்.. தர்மபுரி அருகே பரபரப்பு
தருமபுரி: பள்ளி மாணவி கர்ப்பம் கலைந்து மயங்கி சம்பவம் பென்னாகரம் அருகே பரபரப்பாக பேசப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அருகே உள்ள எலுமல்மந்தை தாயார் மற்றும் பாட்டியுடன் வசித்து வருபவர் சாந்தி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது).
சாந்தி, பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அந்த மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், திடீரென வயிற்று வலி அதிகமாகியுள்ளது.

கழிவறை சென்றவர் மாயம்
இதையடுத்து, ஆசிரியரிடம் கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறி கிளம்பினார். ஆனால் வெகுநேரமாகியும் அந்த மாணவி மீண்டும் வகுப்பறைக்கு திரும்ப வரவில்லை.

ரத்த வெள்ளம்
இதனால் தோழிகள் சிலர் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது சாந்தி மயங்கி கிடந்தார். அவரது காலுக்கடியில் ரத்தம் சிதறி கிடந்தது. இதை பார்த்து பீதியடைந்த மாணவிகள் ஓடிவந்து ஆசிரியைகளிடம் தெரிவித்தனர்.

கரு கலைப்பு
இதையடுத்து முதல் உதவிகளுக்கு பின்னர், மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஓடி வந்து மாணவியை பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருந்ததும், கருவை கலைக்க மாத்திரை உட்கொண்டதால் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மயங்கியதும், தெரியவந்தது.

கள்ள உறவு
இதனால் குழப்பமும், அதிர்ச்சியுமடைந்த மாணவியின் தாயாரும், பாட்டியும் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். இது குறித்து அவர்கள் போலீசில் புகார் செய்யவில்லை. உறவினர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமாகி இந்த நிலைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications