காரைக்குடியில் அனைத்து மன்றங்களின் துவக்க விழா
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (23.07.2018) அனைத்து மன்றங்களின் துவக்கவிழா நடைபெற்றது.
ஆற்காடு s.s.s. கல்லூரி, தமிழ் துறை பேராசிரியரும், சன் டிவி, கலைஞர் தொலைக்காட்சி, ராஜ் டி.வி, போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்றவரான பேராசிரியர் அன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து மன்றங்களையும் துவக்கி வைத்தார்.
தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர் திருநாவுக்கரசு, ரோட்டரி சங்க துணை ஆளுநர் முத்துக்குமார் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் அழகு சுந்தரி வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ் மன்ற செயலாளராக உமா, ஆங்கில மன்ற செயலாளராக கீதா சுந்தரேஸ்வரி, கணித மன்ற செயலாளராக ஜெயமாலினி, அறிவியல் மன்ற செயலாளராக சரவணன் மற்றும் சமூக அறிவியல் மன்ற செயலாளராக கீதா ஆகியோர் பொறுப்பேற்று, மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
பேராசிரியர் அன்பு தனது உரையில் மாணவர்கள் ஒற்றுமையுடனும், சமயோஜிதத்துடனும் இருக்கவேண்டும் என பள்ளியில் நடைபெற்ற ஒரு பாஞ்சாலி நாடக நிகழ்வை கூறி விளக்கினார்.
A.P.J. அப்துல் கலாம், புரட்சிக் கவிஞர் பாரதி, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை, மாணவர்களுக்கு நகைச்சுவையோடு எடுத்துக் கூறினார். மேலும் அ முதல் ஒள வரை உள்ள உயிர் எழுத்துக்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது போன்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார்.
தலைமையாசிரியர் அவர்கள், மாணவர்கள் இம்மன்றங்களை பயன்படுத்தி தங்களது தனித்திறமைகளை வெளிக்கொணர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழ் பட்டதாரி ஆசிரியர் உமா நன்றி கூறினார். உதவி தலைமையாசிரியர் முத்துவேல்ராஜன் மற்றும் விஜயலட்சுமி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.