என்ன கொடுமை இது.. சென்னையில் ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த பள்ளி மாணவன் ரயில் மோதி சாவு
சென்னை: ஓடும் ரயில் முன்பாக நின்றபடி நண்பனோடு செல்போனில் செல்ஃபி போட்டோ எடுக்க முயன்ற பிளஸ் டூ மாணவன் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
செல்போனில் செல்ஃபி எடுத்து அதை பேஸ்புக்கிலோ, வாட்ஸ்அப்பிலோ பதிவேற்றி, நண்பர்களிடம் லைக்குகளையும், கமெண்டுகளையும் பெறுவது இன்றைய தலைமுறையினரிடம் பெரும் அடிமைத்தனமாக மாறியுள்ளது.

செல்ஃபி எடுக்கும்போது வித்தியாச காட்சிகளின் பின்னணி இருப்பின் அதிக லைக் கிடைக்கும் என்ற ஆசையில் விதவிதமான கோணங்களில் செல்ஃபி எடுக்கப்படுகிறது. அவ்வாறு செல்ஃபி எடுக்க முற்பட்டு, விபத்துகளில் சிக்கி பலியாவோர் எண்ணிக்கை உலகமெங்கும் அதிகரித்து வருகிறது.
அதேபோன்ற ஒரு சம்பவம், சென்னையில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. பூந்தமல்லியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவன், தீனா சுகுமார் (17). பூந்தமல்லி ஜேம்ஸ் தெருவில் வசித்து வந்த தீனா சுகுமார், நண்பர்கள் 5 பேருடன் நேற்று வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு டிரிப் சென்றுள்ளார்.
மிருக காட்சி சாலையை பார்வையிட்ட பிறகு, நண்பர்கள் எல்லோரும், வண்டலூர்-ஊரப்பாக்கம் நடுவேயான ரயில் பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில்கள் செல்வதை நண்பர்கள் கவனித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு ஒரு ஐடியா தோன்றியுள்ளது. ரயில் வேகமாக வரும்போது அதன் முன்னால் நின்றபடி செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டால், சூப்பராக இருக்கும் என்று அவர்கள் திட்டமிட்டனர்.
அதேபோல ரயில் ஒன்று வந்தபோது, தண்டவாளத்தில் நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். ரயில் அருகே வந்தபோது, அனைவரும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி ஓடியுள்ளனர். ஆனால், தீனா சுகுமார் ஓடுவதற்குள் ரயில் அவரை மோதி வீசிச்சென்றது.
இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தின் நடுவே அதே இடத்தில் தீனா சுகுமார் துடிதுடித்து பலியானார். சக நண்பர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications