அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த ஆசிரியை பிளேடால் கழுத்தறுத்து கொலை.. உறவினருக்கு வலைவீச்சு
பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Recommended Video
திண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி - லட்சுமி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு பவித்ரா, மயில், அனிதா ஆகிய மகள்கள் உள்ளனர்.
பி.ஏ. படித்துள்ள பவித்ரா, பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இளைஞருடன் சந்திப்பு
நேற்று மாலை இவர், கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் பழனி ஆர்.எப். ரோட்டில் ஒரு இளைஞரை சந்தித்தார்.
வாலிபர் வாக்குவாதம்
அங்கிருந்து அவர்கள் 2 பேரும், முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் அடிவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.ஆட்டோவில் ஏறியதில் இருந்தே பவித்ராவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
அலறிய பவித்ரா
பழனி பூங்கா ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே ஆட்டோ சென்றபோது, ஆட்டோவில் இருந்து திடீரென பவித்ரா அலறினார். இதனால் அச்சமடைந்த டிரைவர் முத்துராமலிங்கம் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தினார்.
கழுத்தறுக்கப்பட்ட பவித்ரா
இதனையடுத்து அந்த வாலிபர், ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பியோடி விட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்தவெள்ளத்தில் ஆட்டோவுக்குள் கதறினார்.
மருத்துவமனையில் சேர்ப்பு
அவர் அருகே, ஒரு பிளேடு கிடந்தது. அந்த பிளேடால் அவருடன் பயணம் செய்த வாலிபர், பவித்ராவின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கம், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
சிகிச்சைபலனின்றி பலி
பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பேலீசார் வலைவீச்சு
பவித்ராவின் கழுத்தை அறுத்தவர் அவரது உறவினர் மாயவன் என தெரியவந்துள்ளது. கழுத்தை அறுத்துவிட்டு தப்பிசென்ற மாயவனை போலீசார் தேடி வருகின்றனர்.
அடுத்த மாதம் திருமணம்
அவரை பிடித்தால் தான், எதற்காக பவித்ராவின் கழுத்தை அறுத்தார்? காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையான என தெரியவரும். பவித்ராவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ் விசாரணை
பழனி அடிவாரம் போலீசார், இதை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.