பள்ளி வாகனங்களில் இன்று முதல் ஆய்வு தொடக்கம் - விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை
சென்னை: பள்ளி வாகனங்கள் இயக்குவதற்குத் தகுதியானவையாக உள்ளதா எனத் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
பள்ளி வாகனங்களில் அவசர வழி கதவு, முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்பது உட்பட 20 விதிமுறைகளை போக்குவரத்துத் துறை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் பள்ளி வாகனங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து இன்று முதல் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணியில் போக்குவரத்து, காவல்துறை, கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபடுவர் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே வாகனத்தை இயக்குவதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஜுலை 26ஆம் தேதி சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் மாணவி சுருதி, பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆண்டு தோறும் போக்குவரத்துத் துறை சார்பில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.