தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு - திருவண்ணாமலையிலும் நாளையே திறப்பு
கோடை விடுமுறை முடிந்து திருவண்ணாமலையிலும் நாளையே பள்ளிகள் திறக்கப்படும் என்ற மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை: வெயில் கொளுத்துவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 15 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்த நிலையில் நாளையே பள்ளிகள் திறக்கப்படும் என்று திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 22ஆம் தேதியும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்ரல் 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால் விடுமுறை காலம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, நாளையே இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியாளர்களே முடிவு செய்யலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்த நிலையில் , வெயிலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் 15 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்தார்.
ஆனால் அந்த அறிவிப்பு சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. நாளையே திருவண்ணாமலையில் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.