குரோம்பேட்டை பக்கம் வானம் மூடிக்கிட்டு வருது.. உங்க எரியாவுல எப்படி இருக்கு?!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வந்த வெயில் லேசாக குறைய ஆரம்பித்துள்ள நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் பல பகுதிகளில் நல்ல காற்றும், வானம் மூடியபடியும் காணப்படுகிறது. அனேகமாக மாலைக்கு மேல் இரவில் மழை வரலாமோ என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
கடும் கோடைகாலத்தை இந்த முறை மக்கள் சற்று மழையுடன் தொடங்கினர். ஆனால் பல பகுதிகளில் மழை தொடரவில்லை. இதனால் அக்னிசுட்டெரித்தது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி போய் விட்டது வெயில். வேலூரில் அதிகபட்சமாக 106 டிகிரி வரை வெயில் ஓடியது.
சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்தெடுத்தது. வீட்டுக்குள் இருக்கவே முடியவில்லை. எங்கு போவது என்று தெரியாமல் மக்கள் மண்டை காய்ந்து போயினர்.
இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னையில் வெயில் சற்று குறைந்து வருகிறது. இன்று பிற்பகலுக்கு மேல் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் வானம் மூடியபடி காணப்படுகிறது.
அனல் குறைந்துள்ளது. வெயில் இறுக்கிறது என்றாலும் கூட வானம் இருட்டிக் கொண்டு வருவது போல உள்ளதால் மழைக்கான சாத்தியக் கூறுகளை மக்கள் யோசித்துக் கொண்டுள்ளனர்.
குறைந்த காற்றழுத்தம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் அபாயச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.