மயிலாடுதுறை இரட்டை கொலை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தவறியதே காரணம்! - எஸ்டிபிஐ
மயிலாடுதுறை: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தவறியதன் விளைவே தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணம் என எஸ்டிபிஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில், சாராய விற்பனை செய்து வந்தவரை, அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தட்டிக்கேட்டுள்ளான். அந்த சிறுவனை சாராய வியாபாரியான ராஜ்குமார் தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்படுவதை கண்ட ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் சேர்ந்து சாராய வியாபாரி ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, ராஜ்குமார் தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து இரு இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாராய வியாபாரியான ராஜ்குமார் உள்ளிட்ட மூவரும் அப்பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சாராய விற்பனை குறித்து தட்டிக் கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர், போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது, ராஜ்குமார் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் வெளிவந்து மீண்டும் சாராய வியாபாரத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம், சட்டவிரோத சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவே, இரு இளைஞர்களின் படுகொலை நிகழக் காரணமாகும் என்பது உறுதியாகிறது. சட்டவிரோத செயல்களுக்காக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய ஒருவரை, சுதந்திரமாக செயல்பட விட்டது காவல்துறையின் தவறாகும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மயிலாடுதுறையில் இளைஞர்கள் படுகொலை விவகாரத்தில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலைக்கு ஆளான இளைஞர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications