ஜெயாவின் சிறிதாவூர் பங்களாவை சோதனையிடுங்கள்: ராஜேஷ் லக்கானியிடம் திமுக மனு
சென்னை: வாக்காளர்களுக்கு அளிக்க சிறிதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்த வேண்டும் என்று கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

மாநிலம் முழுவதும் தேர்தல் அதிரடிப் படையினரால் கணக்கு வழக்கில்லாத பணம் கைப்பற்றப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன; ஆனால் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் வளாகங்களில் இப்படியான சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்கும் சென்னையை அடுத்த சிறுதாவூர் பங்களாவில் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் 10 கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு வாக்காளர்களுக்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாகவும் பின்னர் அந்த லாரிகள் அங்கிருந்து வேறிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என்றும் காட்சி ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் படத்துடன் செய்திகள் வந்துள்ளன.
எனவே, அந்த வாகனங்களின் நடமாட்டம் குறித்தும் அந்த பங்களாவிலும் உடனடியாக முழுமையாக சோதனை நடத்தப்படுவது முறையாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு அவசியமானது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது தவிர தேர்தல் விதிகளை மீறி ஆளும் கட்சியினர் கூட்டுறவு சங்க அலுவலகங்களை தேர்தல் பணிக்காக பயன்படுத்துவதாகவும், புதிதாக ஆட்டோ உரிமங்கள் வழங்கப்படுவது குறித்தும் திமுக சார்பில் தனித்தனியாக மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications