கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது
நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு அக்டோபார் 22ம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்த மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை அடைய 8 மாதங்கள் பிடித்தது. இதனைத் தொடர்ந்து 2வது அணு உலைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதையடுத்து 2-வது அணு உலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கி சோதனை அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது. அதிகபட்சமாக 300 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கப்பட்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பபட்டது.
முதலில் மின்சாரம் தயாரிக்கும் போது அடிக்கடி ஆய்வுக்காக மின் உற்பத்தி நிறுத்தம் செய்து மீண்டும் உற்பத்தி செய்வது வழக்கம். அதன்படி 2-வது அணுஉலையில் மின்சாரம் தயாரிப்பது கடந்த மாதம் 6-ம் தேதி நிறுத்தப்பட்டது. டர்பைன் இயக்குவதும், அணுப்பிளவும் நிறுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. நீராவி வால்வுகள், அணு உலையை நிறுத்தும் வால்வுகள் போன்றவை எப்படி செயல்படுகின்றன என்று ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இன்று மாலை 6.14-க்கு மின் உற்பத்தி தொடங்கியபோது 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அது படிப்படியாக உயர்த்தப்பட்டு முழு அளவான 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.