மதுரை: வேவு பார்த்த பி.ஆர்.பி உறவினர்கள்; சகாயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
மதுரை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி மதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை வேவு பார்ப்பதாக எழுந்த புகாரை அடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு கிரானைட் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிரானைட் குவாரிகளின் முறைகேட்டால் விவசாயம், நீர்நிலைகள், வீட்டு மனைகள், பஞ்சமி நிலங்களின் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உ.சகாயத்துக்கு உத்தர விட்டதையடுத்து, புதன்கிழமை சகாயம் மதுரை வந்தார்.
சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர் மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் தனக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகத்துக்கு வந்த சகாயம் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள கனிம வளம் உதவி இயக்குநர்கள் முருகானந்தம், சுதர்சனம், மண்ணியல் துறை அதிகாரிகள் பெருமாள் ராஜா, ரமேஷ், அறிவியல் நிபுணர்கள் ஹேமா, தேவசேனாதிபதி, ஓய்வுபெற்ற வட்டாட்சியர்கள் அருணாச்சலம், மீனாட்சிசுந்தரம் ஆகியோருடன் ஆய்வு குறித்து ஆலோசித்தார்.
பின்னர் கனிம வளம், வேளாண்மை, பொதுப் பணித் துறை, கால்நடை துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் கிரானைட் முறைகேடு தொடர்பாக எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தார்.
இன்று (வியாழன்) பகல் 11 மணி முதல் பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சகாயத்திடம் மனுக்களை அளித்து வருகின்றனர். இதனிடையே சகாயத்தின் அலுவலகத்திற்கு வெளியே பி.ஆர்.பி நிறுவன உரிமையாளர் பழனிச்சாமியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே நின்றுகொண்டு வேவு பார்ப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
புகார் கொடுக்க வரும் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சகாயத்திடம் விவசாயிகள் தெரிவித்தனர். உடனே மதுரை மாவட்ட காவல்துறையினரிடம் சகாயம் புகார் அளித்தார். இதனையடுத்து சகாயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சகாயத்திற்கு ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் புகாரை அடுத்து தற்போது 2 இன்ஸ்பெக்டர்கள் 4 சப் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications