நெருங்கி வரும் டிசம்பர் 6 - பாதுகாப்பு வளையத்தில் நெல்லை, தூத்துக்குடி!!
திருநெல்வேலி: பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6-ந் தேதி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ந் தேதியன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி ராமனூஜம் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட எஸ்பி விஜேந்திர பிதாரி, தூத்துக்குடி எஸ்பி துரை ஆகியோர் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுதப்படை போலீசார், கமாண்டோ போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கும் விடுதிகளை கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவில், நெல்லை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
ரயில்வே பாலங்கள், தண்டவளங்களில் தீவிர சோதனை நடந்து வருகின்றது. மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு ரயிலில் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம், ரயில் நிலையம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications