வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு.. 5 நிமிடத்திற்கு ஒருமுறை அப்டேட்: லக்கானி
சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் உட்பட, 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், 19ம் தேதியான நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
வாக்கு எண்ணிக்கை பணி குறித்து இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜேஷ் லக்கானி மேலும் கூறியதாவது: வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐடி கார்டு
அடையாள அட்டை இல்லாமல் வாக்கு எண்ணும் பகுதியில் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

செல்போன் தடை
வாக்கு எண்ணும் மையங்களுக்குள், ஊழியர்கள், செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. மையங்களில் செல்போன்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு, பணி முடிந்ததும், அதை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.

மறு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஏதாவது தொகுதியில், வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால், அங்கு பதிவான, தபால் ஓட்டுக்கள் மீண்டும் எண்ணப்படும்.

துணை ராணுவம்
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்படும். மொத்தம் 80 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

3 அடுக்கு இதுதான்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முதல் அடுக்கில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், 2வது அடுக்கில், தமிழக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 3வது அடுக்கில் துப்பாக்கி ஏந்தாத காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

5 நிமிடங்களுக்கு ஒருமுறை
ஒரு டேபிளுக்கு ஒரு ஏஜன்ட் இருக்க அனுமதி வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை நிலவரம் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications