வைகோவுக்கு "பர்ஸ்ட் கிளாஸ்".. புழல் சிறையில்!
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைகோவுக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு விழாவில் ஈழப் படுகொலைகள் குறித்தும், விடுதலைப் புலிகள் குறித்தும் வைகோ பேசினார்.
இதனையடுத்து அப்போதைய திமுக ஆட்சி வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார் வைகோ.
விரைந்து முடியுங்கள்
தேச துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில் என்னை கைது செய்யுங்கள் என்று வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். இதன் மீது விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி வைகோவை சிறையிலடைக்க உத்தரவிட்டது.
ஜாமீன் வேண்டாம்
ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என கூறியதால் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 15 நாள் சிறை வாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் முடக்கம்
வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி கட்டுபவர், அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் வைகோவுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
என்ன என்ன வசதிகள்
வைகோவுக்கு ஒரு மின்விசிறி, கட்டில், தலையணை, போர்வை, நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. மேலும் அவர் படிப்பதற்காக தினமும் ஒரு ஆங்கில மற்றும் ஒரு தமிழ் பத்திரிகைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர் விரும்பினால் சிறை நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வைகோ மௌன விரதம்
சிறையில் உள்ள வைகோ இன்று வழக்கம் போல் நடைபயிற்சியை மேற்கொண்டார். பின்னர் இன்று அவரது தந்தை வையாபுரியாரின் நினைவு நாள் என்பதால் சோகமாக காணப்பட்ட வைகோ மௌன விரதத்தை கடைபிடித்தார்.