தேச துரோக வழக்கு.. வைகோ கோர்ட்டில் ஆஜர்.. விசாரணை 17ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
தேச துரோக வழக்கில் வைகோ இன்று நேரில் ஆஜரானார். விசாரணை இம்மாதம் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை: கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
முன் வந்து..
இந்நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், தானாக முன் வந்து ஏப்ரல் 3 ஆம் தேதி காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜரானார் வைகோ.
ஜாமீன் வேண்டாம்
அப்போது, நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததாக கூறியதையடுத்து, சிறையிலடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீன் வேண்டும் என்று வைகோ கடந்த மாதம் 22ம் தேதி மனு செய்திருந்தார்.
ஜாமீனில் விடுதலை
அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் மே மாதம் 24ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்படி, சென்னை புழல் சிறையில் இருந்து வைகோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் வைகோ நேரில் வந்து நீதிமன்றத்தின் முன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 17ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.
குற்றமற்றவர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தான் குற்றமற்றவர் என்று கூறினார். அதே வேளையில் தான் பேசிய எந்தப் பேச்சை திரும்பப் பெற மாட்டேன் என்று உறுதியுடன் கூறினார்.