வாட்ஸ் ஆப்பில் வாழ்த்தலாம்.... அதுக்காக இப்படியும் செய்யலாமா?
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு திருமணத்தில் வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் வடிவில் அமைக்கப்பட்ட பேனர் ஒன்று அங்கு பார்ப்போர் மத்தியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு திருமண வீட்டில் மணமகனது நண்பர்கள் வைத்துள்ள பேனர் திருமணத்துக்கு வருவோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிறந்த நாள் முதல் திருமணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா என போஸ்டர்கள், பேனர்கள் அதகளப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லபோனால் இறப்புக்குக் கூட பேனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நல்ல காரியங்களுக்கு எத்தனை புதுமைகளை புகுத்த முடியுமோ அத்தனையையும் செய்து வருகின்றனர் பேனர் தயாரிப்பாளர்கள். இதில் பேனருக்கு ஆர்டர் கொடுக்கும் இளசுகளின் பங்குகளும் அதிகம்.
இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களும் மாறி வருகின்றனர். அதே சமயம் அவர்களின் டிரெண்டுகளும் மாறுகின்றன. அப்போதெல்லாம் விஐபிக்களின் வீட்டு திருமணங்களுக்கு மட்டுமே பேனர்கள் வைக்கப்பட்டு வந்தன.
ஆனால் இன்று கிராமப்புறத்தில் கூட பேனர் கலாசாரம் விட்டு வைக்கவில்லை. அந்தளவுக்கு புதுமைகளை புகுத்தி வருகின்றனர். திருமண பந்தம் என்பது இரு மனங்களும் இணையும் வைபோவம் என்பது போய், இப்போது கைது, அது இது என்ற ரேஞ்சுக்கு போய்விட்டது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் ஒரு வித்தியாசமான திருமண பேனர் வைக்கப்பட்டது. அதில் கைது செய்பவர் என்ற இடத்தில் பெண்ணின் பெயரையும், கைது ஆனவர் என்ற இடத்தில் ஆணின் பெயரையும் குற்றம் என்ற இடத்தில் மனதை திருடியது, தண்டனை மூன்று முடிச்சி என்று வைக்கப்பட்டிருந்த பேனர் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் லேனா மகாகில் அனுசுயா, ரமேஷ் ஆகிய இருவருக்கும் இன்று நடைபெற்ற திருமணத்தில் வைக்கப்பட்ட பேனர் அனைவரின் செல்போன் கேமராவிலும் பிடிக்கப்பட்டது. அதாவது வாட்ஸ் ஆப் செயலி போன்று வடிவமைக்கப்பட்ட அதில் உள்ள ஸ்டார் பாய்ஸ் என்ற குழுவின் உறுப்பினர்கள் திருமண வாழ்த்தை பரிமாறிக் கொள்ளும் படியாக இருந்தது வந்திருந்தோரை கவர்ந்தது.